திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.
இன்று அவர் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்வதற்கு எர்ணாகுளத்தில் இருந்து குஜராத்தின் ஒகா பகுதிக்குச் செல்லும் ஒகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார்.
இன்று பிற்பகல் கொடைக்கானல் ரோடு அருகே ரயில் வரும்போது இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவிலிருந்த குழந்தை உயிரிழப்பு!
இதையடுத்து அந்த இளம்பெண், 139 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் வந்து சதீஷ் குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.
இவர் ஈரோடு செல்வதற்கு விருதுநகர் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளதும் மதுபோதையில் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் வேலூர் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.