`திமுக-வினர் நாகரீகமற்றவர்கள்’ - சர்ச்சையாக பேசிய Dharmendra Pradhan ; கொதித்த திமுக எம்.பிக்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்துகேள்வியெழுப்பினார்.

`மாநிலத்துக்கு எதிராக பழிவாங்கும் கருவி’
தன்னுடைய உரையில் தமிழச்சி தங்கபாண்டியன், ``தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால், பி.எம் ஸ்ரீ திட்டத்தின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ரூ. 2,000 கோடியை வேறு மாநிலங்களுக்கு பகிரப்படுருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல் கூட்டாட்சி தத்துவது எதிரானது. பள்ளி கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை, மாநிலத்துக்கு எதிராக பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இது பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் உறுதிசெய்ய வேண்டும். " என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ``திமுக நேர்மையற்றது. தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் (திமுக) ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்." என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் திமுக எம்.பிக்கள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தர்மேந்திரா பிரதான், தனது பேச்சு புண்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.