கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
`திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் பேரணி நடத்துவதா?' - உயர் நீதிமன்றம் கேள்வி!
"திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோயில் 18 ஆம் படி கருப்பசாமிக்கும், பாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது...." என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/dbd66653-4293-4019-8b0c-1933cc7b5199/132835_thumb.jpg)
பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று எந்த வித அடிப்படையும் இல்லாமல் இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி பிரச்னை செய்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 18 ம் தேதி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலிருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு அளித்தும், இதுவரை காவல்துறை அனுமதியளிக்கவில்லை. பிப்ரவரி 18 ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, "திருப்பரங்குன்றம் மலையின் உரிமை குறித்து பேரணி நடத்த மனுதாரர் அனுமதி கோருகிறார். ஏற்கெனவே 05.02.2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்து முன்னணி சார்பில் போராடம் நடத்த அனுமதி வேண்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவையும் மீறி மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கேட்கக்கூடிய வழிப்பாதை மிகவும் நெருக்கடியான, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை.
திருப்பரங்குன்றம் மலை உரிமை குறித்து ஏற்கெனவே பிரிவியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு, மீண்டும் அது குறித்த பிரச்னை எழுப்புவது சரியல்ல. இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு கோழி பலியிட்டு படைத்து உண்ணுவது இதுவரை வழக்கமாக உள்ளது என அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்த ஆர்.டி.ஓ அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவரும் அரசுக்கு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையை சுற்றி மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோயில் 18 ஆம் படி கருப்பசாமிக்கும், பாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது.
கடந்த 18.01.2025 அன்று மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டு தர்காவில் சமபந்தி விருந்திற்கு அழைப்பு விடுப்பது போன்று சில சமூக விரோதிகள் பொய்யான பதிவினை வெளியிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களிடையே மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் சமூக விரோதிகள் திட்டமிட்டு இச்செயல்களை செய்து வருகின்றனர். காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள இந்து, முஸ்லீம், ஜெயின் சமய மக்கள் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை ஒரு காரணமாக்கி இந்து முஸ்லீம்களிடையே தேவையற்ற கலவரங்களை உருவாக்கி ஒற்றுமை குலைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் கோயில் நகரமாக அழைக்கப்படும் மதுரை, மத நல்லிணத்திற்கு பெயர் பெற்ற புனித தலமாகும். கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள சுல்தான் அலாவுதீன் தர்காவில் இன்றுவரை இந்து மதத்தை சேர்ந்த செங்குந்த முதலியார் சமூக மக்களால் வழங்கப்படும் கொடிதான் ஏற்றப்படுகிறது. சமீபத்தில் காரைக்குடியில் ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லீம் மதத்தினர் சீர்வரிசை, நன்கொடை வழங்கினார்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் விநாயக சதுர்த்தி விழாவினை கொண்டாடி அன்னதானம் வழங்கினார்கள். திருப்பூர் ஒத்தப்பாளையத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் விநாயகர் கோயில் அமைக்க 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதோடு அக்கோயில் குடமுழுக்கு விழாவை இரு சமுதாயத்தினரும் சிறப்பாக நடத்தினார்கள்.
நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பழனியாண்டி பிள்ளை பரம்பரையிலிருந்துதான் இன்றுவரை போர்வை போர்த்தப்படுகிறது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் என்றும் பெயர் பெற்றது. மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது, ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம், யாருடைய மத வழிபாட்டிலும் நாங்கள் தலையிட மாட்டோம், தடுக்க மாட்டோம், இது போன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கும், இத்தருணத்தில் மனுவில் கோரியுள்ளவாறு 18.02.2025 அன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்னைகளை உருவாக்கும்" என வாதிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-06/24540dc2-0ab1-4beb-aa0c-2d2a8edd8da5/GST_AAR_Madras_High_Court_Taxscan.jpg)
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது, திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்க பார்க்கிறீர்கள்" என கண்டித்தவர், "வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு" உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.