தில்லி பேரவைத் தலைவராக விஜேந்தர் குப்தா தேர்வு!
தில்லி சட்டப்பேரவையின் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ விஜயேந்தர் குப்தா திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லிக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அதன்பிறகு இன்று காலை கூடிய தில்லி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரவிந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவராக பாஜக சார்பில் விஜேந்தர் குப்தா பெயரை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்தார்.
குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா, பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, முதல்வர் ரேகா குப்தாவும் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஒன்றிணைந்து பாரம்பரியப்படி, அவரை பேரவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.