சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
”நானும் குடும்பமும் பிழைப்போமான்னு தெரியல"- தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்-கண்ணீரில் பெண் விவசாயி
டெல்டா மவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வரும் நிலையில் அரசு முன்கூட்டியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளைத் தொடங்கின. சாக்கு பாற்றக்குறை, நெல் மூட்டைகள் இருப்பு வைப்பதற்கான குடோன் தயாராக வைக்கவில்லை, முன்பட்ட குறுவை, சம்பா நெல் மூட்டைகளை குடோனில் இருந்து அனுப்பவில்லை, பாதுக்காப்பான திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களால் கொள்முதல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாததால் கொள்முதல் நிலையத்திலும், சாலைகளிலும் குவித்து வைக்கப்பட்டன. அத்துடன் கொள்முதல் தாமத்தால் நேரத்திற்கு செய்ய வேண்டிய அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பெய்த தொடர் மழையில் நெல் மணிகள் நனைந்து பாதிப்படைந்ததில் முளைக்கத் தொடங்கிவிட்டன. வயலில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிரும் நீரில் சாய்ந்து முளைத்துவிட்டதாக விவசாயிகள் புகார் சொல்கிறார்கள்.
நெல் கொள்முதல் முடங்கியதால் கடும் பாதிப்படைந்த விவசாயிகள் மழையில் நெல் வீணாவதை ஏற்க முடியாமல் குமுறி வருகின்றனர். தண்ணீரில் நெல் மணிகள், கண்ணீரில் விவசாயிகள், விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்பு விளைஞ்சும் கைக்கு வந்து சேரலை' எனப் பல விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டார்.

தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது ஒரு விவசாயி, "15 ஏக்கரில் குறுவை அறுவடை செய்தேன். கொள்முதல் செய்யாததால் 15 ஏக்கரில் விளைஞ்ச நெல்லும் 15 நாளாக சாலையில் கிடந்ததில் முளைத்து விட்டது" என்றார். "தார்பாய் போட்டு மூடி பாதுகாக்க முடியவில்லையா"என எடப்பாடி பழனிசாமி கேட்க, "தார்பாயில் மூடினாலும் தரைப்பகுதி வழியாகத் தண்ணீர் சென்று முளைத்து விட்டது" என்றார். மற்றொரு விவசாயி தனக்கு 500 மூட்டை பாதிப்பு அடைந்து விட்டதாகச் சொன்னார்.
காட்டூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள் மட்டும் 2,000 மூட்டைகள் இருக்கும் எனத் தெரிவித்தனர். இது குறித்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்கிற பெண் விவசாயி, "என் கணவர் கூலி வேலை செய்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். இளைய மகனுக்கு வாய் பேச வராது. ஏற்கெனவே பல சுமைகள் என்னை அழுத்தி வரும் நிலையில் 5 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து நடவு செஞ்சேன். பத்து நாளைக்கு முன்னாடியே அறுவடை செய்திருக்கணும். கொள்முதலில் மூட்டைகள் தேங்கியதால் இப்போதைக்கு அறுவடை செய்ய வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். தீபாவளிக்கு முன்பு நெல்லை போட்டு விடலாம் என நினைச்சேன் முடியல.

தொடர் மழை பெய்ததில் வயலில் நெற்பயிர் சாய்ந்து தேங்கி நிற்கும் மழை நீரில் மூழ்கி முளைத்துவிட்டன. இனி அந்த நெல் தேறுவதற்கு வாய்ப்பில்லை. கொள்முதல் சரியாக நடந்திருந்தால் என் பயிருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. என்னைப் போன்ற குத்தகை விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் தருவதில்லை, நகை அடகு வைத்ததையும் வாங்கவில்லை. தனியார் வங்கியில் நகையை அடகு வைத்து நடவு செஞ்சேன். நெற்பயிர் பாதிக்கப்பட்டதில் இப்போது பரிதவித்து நிற்கிறேன். அரசு, வேளாண் அதிகாரிகள் மூலம் என் நிலையை அறிந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்ப தான் நானும், என் குடும்பமும் பிழைப்போம். இல்லைன்னா...." மேற்கொண்டு பேச முடியாமல் விம்மினார்.