நியூஸி. முதலில் பந்துவீச்சு: இந்தியா திணறல் தொடக்கம்!
துபை : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இவ்விரு அணிகளுமே ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவு எந்த அணிக்குமே தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை.
இந்த போட்டியில் டாஸ் சுண்டப்பட்டதில் நியூஸிலாந்துக்கு சாதகமாக நாணயம் விழவே, அதனைத்தொடர்ந்து, முதலில் பந்துவீசுவதாக நியூஸிலாந்து மிட்செல் சாண்ட்நெர் தெரிவித்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஆரம்பமே அதிர்ச்சி!
இந்திய அணியின் ஸ்கோர் 15 ஆக இருந்தபோது நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரை இரண்டே ரன்களில் எல்.பி.டபில்யூ முறையில் பெவிலியனுக்கு அனுப்பினார் மேட் ஹென்றி.
அடுத்ததாக, கேப்டன் ரோஹித் சர்மாவும் 15 ரன்களுக்கு ஜேமிசன் பந்துவீச்சில் வில் யங்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 22 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அணியை சரிவிலிருந்து மீட்கும் பெரும் பொறுப்புடன் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென் ஆன விராட் கோலி களமிறங்கினார். இந்த நிலையில், அவர் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆஃப் சைட்டில் பவுண்டரிக்க அடித்த பந்தை பாய்ந்து பிடித்து கேட்ச் ஆக்கி இந்திய அணிக்கு மூன்றாவது விக்கெட் விழ காரணமானார் க்ளென் பிளிப்ஸ்.
இதன் காரணமாக, இந்திய அணி 7 ஓவர்களுக்குள் 30 ரன்களை மட்டுமே திரட்டி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.