``நூலிழையில் உயிர் பிழைத்தோம்..'' - காஷ்மீரில் நடந்ததை கண்ணீருடன் விவரிக்கும் மகாராஷ்டிரா தம்பதி
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாஹல்காம் அருகில் மினி ஸ்விட்சர்லாந்து எனப்படும் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று பிற்பகல் திடீரென புகுந்து சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக சுட்டனர்.
பயங்கரவாதிகள் சுட்டதில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்கும்.
இத்தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மும்பை டோம்பிவலியை சேர்ந்த அதுல் என்பவர் தனது நண்பர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் அகமதாபாத் வழியாக காஷ்மீர் சென்று இருந்தார். இதில் அதுல் உள்பட மும்பையில் இருந்து சென்ற 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு வரை சம்பவ இடத்தில் நின்ற மகாராஷ்டிரா தம்பதி நூலிலையில் உயிர் தப்பி இருக்கின்றனர்.
அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிய 20 நிமிடத்தில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை சுற்றிவலைத்து சரமாரியாக சுட்டுத்தள்ள ஆரம்பித்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்த மகாராஷ்டிரா தம்பதி அளித்த பேட்டியில், ''நாங்கள் அங்கிருந்து கிளம்பியவுடன் தாக்குதல் நடந்தது. அங்கு நடந்த துப்பாக்கிச்சூடு சத்தம் எங்களுக்கு கேட்டது. அங்குள்ள அனைவரும் தப்பிக்க முயன்றனர். நாங்கள் இனி காஷ்மீர் பக்கமே திரும்பி பார்க்கமாட்டோம். இங்கிருந்து தப்பித்துச் சென்றால் போதும்''என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து தனது மகன் மற்றும் மகளுடன் தப்பித்து வந்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிக்னிக் ஸ்பாட்டில் நுழைவு வாயில் மிகவும் குறுகியது. நாங்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்தோம். எனது மனைவிக்கு கால் ஒடிந்துவிட்டது'' என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரின் மனைவி இது குறித்து கூறுகையில், ''மக்கள் துப்பாக்கிச்சூடு நடக்கிறது, ஓடுங்கள் என்று கத்தினர். இதனால் எங்களுக்கு பின்னால் மக்கள் ஓடி வந்தனர். எங்களால் திரும்பிக்கூட பார்க்க முடியவில்லை. சம்பவ இடத்தில் இருந்து வெளியில் வரவே நாங்கள் கஷ்டப்பட்டோம்'' என்று அதிர்ச்சி கலந்த பயத்துடன் தெரிவித்தார்.
மதத்தை கேட்டு சுட்ட தீவிரவாதிகள்
"துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தெரிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகள் குரானின் கலிமா சொல்லும்படி கேட்டு அவர் முஸ்லிமா இல்லையா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு சுட்டனர்." என்று சம்பவ இடத்தில் இருந்து தப்பித்த சில பயணிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் கூறுகையில், ``ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளின் பேண்ட்டை கழற்றச்சொல்லி அவர்கள் முஸ்லிமா என்பதை தெரிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தம்பதியிடம் சென்று கலிமா சொல்லும்படி கேட்டனர். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதனால் அதில் ஆணை மட்டும் சுட்டுக்கொன்றனர். எங்களிடம் வந்த தீவிரவாதிகள் கலிமா கூறும்படி கேட்டனர். எனது கணவரால் கூற முடியவில்லை. உடனே எனது கணவரின் தலையில் சுட்டுக்கொன்றனர்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடக்கும் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்துதான் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கும். விரைவில் அமர்நாத் யாத்திரை தொடங்க இருக்கும் நிலையில் இத்தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் அமர்நாத் யாத்திரை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
