OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக...
பழனிசாமி பெயர் தவிர்ப்பு; அதிருப்தியை வெளிக்காட்டிய பேனர்? - செங்கோட்டையன் கூட்டத்தில் என்ன நடந்தது?
அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதிருப்தி தெரிவித்தது, அதிமுக மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தில் குவிந்ததால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/tam5vp8q/WhatsApp_Image_2025_02_12_at_21_31_27.jpeg)
இந்நிலையில், ஈரோடு லக்கம்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. வழக்கமாக சாலையில் தொடங்கி மேடையில் வைக்கப்படும் கட்சி பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைப்படங்கள் இடம்பெறும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பெரிதாகவும், அதற்கடுத்து உள்ளூர் தலைவர்களின் படங்கள் சிறிதாகவும் போடப்படும். ஆனால், லக்கம்பட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் வலதில் ஜெயலலிதாவின் முழு உருவப் படமும், இடதில் எம்ஜிஆரின் முழு உருவப் படமும் நடுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையனின் படமும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி விட்டுத்தான் மற்ற நிர்வாகிகள் பெயரை செங்கோட்டையன் பேசி வந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை மட்டும் கூறி, எடப்பாடி பழனிசாமியின் தவிர்த்துவிட்டு மற்ற நிர்வாகிகளின் பெயரைக் கூறி பேசத் தொடங்கினார். தனது பேச்சில் ஓர் இடத்தில் மட்டும் பொதுச்செயலாளரின் கட்டளையின்பேரில்தான் என்று இந்தக் கூட்டம் நடைபெறுவதாக கூறிய செங்கோட்டையன்... அப்போதும்கூட, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/ktrw2i07/WhatsApp_Image_2025_02_12_at_22_07_45.jpeg)
இதற்கு முன்னதாக பேசிய செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களும் பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினருமான பண்ணாரி, முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைத் தவிர்த்துவிட்டே தங்களது பேச்சை முடித்தனர். ``எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள்" என்று தனது ஆதங்கத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தினார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சு எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையிலான விரிசலை வெளிப்படுத்தும் விதமாத இருப்பதாக அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமியின் பெயரைத் தவிர்த்தது மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு நிகராக செங்கோட்டையனின் படம் பேனரில் போடப்பட்டது அதிமுக வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.