பாலிவுட் நடிகர் கொலை; நண்பர்கள் செய்த கொடூரம்; பெற்றோர் புகார்
பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் ரோஹித் பாஸ்ஃபோர். மும்பையில் வசித்து வந்த ரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்கு சென்றார். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் சிலருடன் கர்பங்கா வனப்பகுதியில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றார். பிற்பகலில் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. அவரை மொபைல் போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரின் நண்பர்கள் ரோஹித் பெற்றோருக்கு போன் செய்து, ரோஹித் நீர்வீழ்ச்சியில் விழுந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உறவினர்கள் மாநில ரிசர்வ் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ரிசர்வ் போலீஸார் ரோஹித்தை மீட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். ரோஹித்தை அவரது நண்பர்கள் சிலர் அடித்து கொலை செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில்,''கார் பார்க்கிங் தொடர்பாக 3 பேர் ரோஹித்துடன் சண்டையிட்டனர். அப்போது ரோஹித்திற்கு மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தான் திட்டமிட்டு வெளியில் அழைத்து சென்று கொலை செய்துவிட்டனர்''என்று தெரிவித்தனர். ஜிம் பயிற்சியாளர் அமர்தீப் என்பவர்தான் ரோஹித்தை வெளியில் அழைத்து சென்றதாகவும், வெளியில் சென்ற இடத்தில் ரஞ்சித், அசோக், தரம் ஆகியோர் அடித்துக் கொலைசெய்து நீர்வீழ்ச்சியில் தூக்கிப்போட்டுவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் கூறுகையில்,''ரோஹித் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் தலை, முகம் உட்பட உடம்பு முழுக்க காயம் இருக்கிறது. கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதில் தொடர்புடைய நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம்''என்று தெரிவித்தார். ரோஹித் பேமிலி மேன் வெப் சீரிஸ் சீசன் 3 ல் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.