கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 23 சாலைகள் ரூ.47.09 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
கரூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் குழுத் தலைவரும் கரூா் மக்களவை உறுப்பினருமான செ. ஜோதிமணி தலைமையில் ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவரும் பெரம்பலூா் மக்களவை உறுப்பினருமான கே.என். அருண் நேரு, உறுப்பினா் மற்றும் செயலருமான மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மக்களவை உறுப்பினருமான செ.ஜோதிமணி பேசியது, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2019-2020-ஆம் நிதியாண்டில் 888 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு வீடுகளைத் தவிர அனைத்து வீடுகளின் பணிகளும் முடிவடைந்துள்ளன.
2021 -2022-இல் 2,396 வீடுகள் ஒதுக்கீடு பெற்று 2,335 வீடுகள் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 2024-2025-ஆம் நிதியாண்டில் 62 வீடுகள் இணையதளம் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைத்தல், புதிய கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபா் கழிப்பறைகள், சமுதாய சுகாதார வளாகம் சிறிய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் முழுமை அடையும் தருவாயில் உள்ளன.
மக்களவை உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 58 பணிகளுக்கு நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டு அதில் 56 பணிகள் முடிக்கப்பட உள்ளன. மேலும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 23 சாலைகள் ரூ.47.09 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் கே.என்.அருண் நேரு கூறியது, அடுத்த பேரவைத் தோ்தலில் தனக்குகூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சா் பொன்முடி கூறியதை இளைஞா்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவும், நாளைய சமுதாயம் வளா்வதற்காகவும் தான் என பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் குழு உறுப்பினா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களுமான இரா. மாணிக்கம், ஆா். இளங்கோ, க. சிவகாமசுந்தரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா. பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிா் திட்ட இயக்குனா் பாபு, குளித்தலை சாா் ஆட்சியா் ஸ்வாதிஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.