பிக் பாஸ் சீசன் 8-ல் மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மந்தமாகச் சென்றுகொண்டிருந்த எபிசோட்கள் மெல்ல கார சார உரையாடல், டாஸ்க் என நுழைந்திருக்கிறது.
விஜய் டிவியில் அக்டோபர் 6-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அதிரடி காட்டிய பிக் பாஸ், ஒரே நாளில் சாச்சனாவை வெளியேற்றினார். ஆனால் மறு வாரமே சாச்சனா திரும்பவும் நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். தொடர்ந்து முதல் வார எவிக்ஷன் நிகழ்ந்து ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சீசன் 8-ன் முதல் வார ரிசல்ட் அதாவது டி.ஆர்.பி. விவரம் வெளிவந்து விட்டது. நிகழ்ச்சிக்கு நல்ல டி.ஆர்.பி. கிடைத்திருக்கிறது.
கமலுக்கு பதில் வந்த விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்குள் நன்றாகவே செட் ஆகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சேனல் ஆட்களுக்கு வேலையே வைக்காமல் நிகழ்ச்சியை அசால்ட்டாக ஹேன்டில் செய்கிறாராம்.
எனவே விஜய் சேதுபதியைக் கமிட் செய்ததில் சேனலுக்கு இப்போது ரொம்பவே ஹேப்பியாம். இருந்தாலும் சில போட்டியாளர்கள் கன்டென்டுக்காக வேண்டுமென்றே வலிந்து சில செயல்களைச் செய்து வருகின்றனர் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்த சீசனின் போட்டியாளர்களாக 'செல்லம்மா' தொடரில் நடித்த அர்னவ் அன்ஷிதா இருவரும் தேர்வான போதே 'கன்டென்ட் இருக்கு' என யூகித்து விட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
அர்னவ் அவரின் மனைவி திவ்யா இருவருக்குமிடையில் பிரச்னை உருவானதற்கு அன்ஷிதாவே காரணம் என்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய விவகாரமாகப் பேசப்பட்டது. சர்ச்சைக்குரிய ஒரு ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. பிக் பாஸ் வீட்டுக்குள் இவர்கள் இருவரும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்து வரும் சூழலில், சில தினங்களுக்கு முன் சக போட்டியாளர் முத்துக்குமாரிடம் அன்ஷிதா போட்ட சண்டை பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்றைய டாஸ்க் ஒன்றில் அன்ஷிதாவுக்கு `சொம்பு துாக்கி' என்ற பட்டத்தை அர்னவ் கையால் கொடுக்க கலங்கிப் போய்விட்டார் அன்ஷிதா. இதை வேற யாராவது குடுத்துருந்தா நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன் நீ கொடுத்துருக்கக் கூடாது என அழுதுவிட்டார்.
அன்ஷிதா குறித்தும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடுவது குறித்தும் அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசினோம்.
''சொந்த ஊர் கேரளா. 'செல்லம்மா' தொடரில் கமிட் ஆன பிறகு அர்னவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாங்க. அர்னவ் திருமணமானவர்னு தெரிஞ்சும் இவர் பழகியதை தான் பலரும் விமர்சிக்கிறாங்க. ஆனா அர்னவ் தான் அவங்க கிட்ட, திவ்யாவுக்கும் தனக்கும் செட் ஆகலைன்னு சீக்கிரத்திலேயே திவ்யாவை டைவர்ஸ் பண்ண போவதாகவும் சொல்லி அன்ஷிதாவை குழப்பி விட்டு, கன்வின்ஸ் செய்து தேவையில்லாம அவருடைய குடும்ப சிக்கலுக்குள் இவங்களையும் இழுத்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் அர்னவ்-திவ்யா இடையே பிரிவு உண்டாகிவிட்டதால் அவரை முழுசா நம்பத் தொடங்கிட்டாங்க. அதனால இப்ப ரெண்டு பேரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்காங்க. தொடர்ந்து இப்படியே இருக்க முடியுமான்னு கேட்டு அர்னவ் கிட்ட தன்னைக் கல்யாணம் செய்துக்க சொல்லிக் கேட்டு வர்றதாகவும் அதுக்கு அர்னவ் சரியா காது கொடுக்க மறுக்கிறார்ங்கறது தான் அவங்க விஷயத்துல நடக்கிறது. கேரளாவில் ஒருவரைக் காதலித்து அந்தக் காதல் தோல்வியடைந்து விட மன அழுத்தத்துல இருந்தாங்க அன்ஷிதா. அர்னவ் விவகாரமும் தேவையில்லாத கெட்ட பெயரைத் தந்து விடவே தற்போது கொஞ்ச நாள்களாகவே மனதளவில் அழுத்தத்திலிருக்கிறார்" என்கிறார்கள் அவர்கள்.
விஜய் டிவியிலும் அன்ஷிதாவுக்கு ஓரளவு செல்வாக்கு தான் என்கிறார்கள் சேனல் தொடர்புடையவர்கள். 'செல்லம்மா' தொடரில் நடித்தவர், அதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்த 'குக்கு வித் கோமாளி' மற்றும் தற்போது பிக்பாஸ் என அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள் இவர்கள்.
அர்னவ் -திவ்யா இருவரும் சட்டபூர்வமாக இன்னும் பிரியவில்லை என்பதாலேயே அர்னவ் அன்ஷிதாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருக்கிறரர் எனக் கூறுகின்றனர் அர்னவுக்கு நெருக்கமானவர்கள்.