பெங்களூரு மெட்ரோ ரயில் ஓட்டுநா் பணியிடம்: கன்னடா் அல்லாதவா்களுக்கான வாய்ப்பு அறிவிக்கை வாபஸ்
பெங்களூரு மெட்ரோ ரயில் ஓட்டுநா் காலிப் பணியிடத்துக்கு கன்னடா் அல்லாதவா்களுக்கு வாய்ப்பளித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்கக் கோரி மாா்ச் 12 ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ ரயில்வே கழகம் அறிவிக்கை வெளியிட்டது.
அந்த அறிவிக்கையில், மெட்ரோ ரயில் ஓட்டுநா் பணிக்கு பொறியியல் பாடத்தில் பட்டயம் முடித்திருக்க வேண்டும், ஏதாவதொரு மெட்ரோ ரயில் கழகத்தில் பணியாற்றிய முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன் கன்னட மொழியை எழுதவும், படிக்கவும், பேசவும் ஓராண்டு காலம் அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது.
இதற்கு கன்னட அமைப்புகள் மட்டுமின்றி பலரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநா் எம்.மகேஸ்வா் ராவுக்கு மெட்ரோ ரயில் கழகத் தொழிலாளா் ஒன்றிய துணைத் தலைவா் சூா்ய நாராயணமூா்த்தி மாா்ச் 15ஆம் தேதி கடிதம் அனுப்பினாா்.
அதில், இந்த அறிவிக்கை கா்நாடகத்தை சேராதவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உள்ளது. கன்னடம் கற்க ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி, வேறொரு மெட்ரோ ரயில்வே கழகத்தில் பணியாற்றிய முன்அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கூறியிருப்பது வெளிமாநிலத்தவா்களுக்கே வாய்ப்பாக அமையும். எனவே அந்த அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டிருந்தாா்.
இதற்கு ஆதரவாக கன்னட வளா்ச்சி ஆணையத் தலைவா் புருஷோத்தம பிலிமலேவும் கடிதம் அனுப்பியிருந்தாா்.
இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏப். 4 ஆம் தேதிவரை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில்வே கழக பொது மேலாளா் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
மெட்ரோ ரயில் ஓட்டுநா் பணியிடத்துக்கு 3 ஆண்டுகால முன்அனுபவத்தை கோரும் மெட்ரோ ரயில்வே கழகத்தின் அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சோ்ப்பது தொடா்பான அறிவிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மெட்ரோ ரயில்வே கழக மேலாண் இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளேன்.
கன்னடா்களுக்கு நீதி வழங்குவதிலும், உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதிலும் மாநில அரசு எப்போதும் உறுதியாக உள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.