மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!
மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார்.
மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர்களும் இன்னலைச் சந்திப்பது ஏன்? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பிய நிலையில், புஷ்கர் சிங் தாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதுவரை 40 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகைப் புரிந்தனர்.
தற்போது அந்த இரு விஷேச நாள்களையும் தாண்டி அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி புறப்பட்டுள்ளனர். அதிக வாகனங்கள் வருவதால், பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மத்திய பிரதேசத்திலேயே தடுக்கப்படுவதாகவும், பலரும் மத்திய பிரதேசத்திலேயே தங்கிவிடுவதாகிவும் கூறப்படுகிறது.
பிரயாக்ராஜ் பகுதிக்கு முன்பே 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்துக் காவல்துறையினர் தடுமாறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், திரிவேணி சங்கமத்தில் நெருக்கமாக பக்தர்கள் புனித நீராடி வருவதால், நீர் வெளியேறாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் செருப்பு, துணிகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் தண்ணீரில் மிதந்து அசுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டுவதாகவும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்துடன் திரிவேணி சங்கமத்தில் தாமி புனித நீராடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
''உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் மகா கும்பமேளாவுக்கு வருகிறார்கள். நான் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதை அதிருஷ்டமாகக் கருதுகிறேன். 2027-ல் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறவுள்ளது. இதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மகா கும்பமேளாவில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களின் அனுபவங்கள் அடங்கிய விடியோவை அகிலேஷ் யாதவ் பகிர்ந்திருந்தார்.
அதில் அகிலேஷ் பதிவிட்டுள்ளதாவது,
''கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பிரயாக்ராஜில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ள எந்த அமைச்சரோ அல்லது நபரோ காணப்படவில்லை. கும்பமேளாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் யோகி அரசு முழுமையான தோல்வியை அடைந்துள்ளது.
பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட இடமில்லை. சாலைகளில் மயக்கமடைபவர்களைக் கவனிக்கவும் எந்தவித ஏற்பாடும் செய்யப்படவில்லை. மேலும், காவல்துறையினருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீருக்கான ஏற்பாடு இல்லை'' என குற்றம் சாட்டியிருந்தார்.