மகாராஷ்டிரம்: 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை!
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி, அகோலா, புல்தனா, வாஷிம் மற்றும் யவாட்மல் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த ஜனவரி 2001-ம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரையிலான காலத்தில் சுமார் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியானதாக அமராவதி வருவாய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அறிக்கையின்படி கடந்த 24 ஆண்டுகளில் அமராவதி - 5,395 (விவசாயிகள் பலி எண்ணிக்கை), அகோலா - 3,123, யவாத்மல் - 6,211, புல்தனா - 4,442 மற்றும் வாஷிம் - 2,048 விவசாயிகள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தாண்டு (2025) ஜனவரியில் மட்டும் இந்த 5 மாவட்டங்களில் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் யவாத்மால் - 34, அமரவதி, அகோலா, புல்தானா மாவட்டங்களில் தலா 10 பேரும் மற்றும் வாஷிம் - 7 பேரும் தற்கொலையால் பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையில் கடந்த 24 ஆண்டுகளில் தற்கொலை செய்து பலியான விவசாயிகளில் 9,970 வழக்குகள் அரசினால் வழங்கப்படும் இழப்பீடு பெறும் தகுதிவுள்ளதாகவும், 10,963 வழக்குகளில் இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 319 வழக்குகள் தற்போது நிலுவையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு விதிமுறைகளின் படி கடன் சுமை மற்றும் பயிர்கள் நாசமானது ஆகிய காரணங்களினால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!