பாபா சித்திக் கொலை: பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் துப்பாக்கிகள் வந்தனவா? காவல்...
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: மும்முனை போட்டியை எதிர்கொள்ளும் தாக்கரே வாரிசுகள்; பின்னணி என்ன?
மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முறையாகத் தேர்தல் அரசியலில் குதித்தவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே. இவர் கடந்த தேர்தலில் மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு மாநில அமைச்சராகவும் இருந்தார். இப்போது மீண்டும் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக ஏற்கனவே தனது பெற்றோருடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
இம்முறை இத்தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே தனது நவநிர்மாண் சேனா கட்சி சார்பாக சந்தீப் தேஷ்பாண்டே என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அவரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டார். இத்தொகுதியில் பா.ஜ.கவின் மாநிலப் பொருளாளர் சாய்னா என்.சி. போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார். அதற்காக அத்தொகுதியில் வேலைகளையும் செய்து வந்தார்.
ஆனால் அத்தொகுதியில் ஆளும் மஹாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (ஷிண்டே), புதிய திருப்பமாக எம்.பி. மிலிந்த் தியோராவை ஒர்லி தொகுதி வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. வழக்கமாக எம்.எல்.ஏ.க்கள்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால் ராஜ்ய சபை எம்.பியான மிலிந்த் தியோராவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ.தேர்தலில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். ஆதித்ய தாக்கரேயிக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏக்நாத் ஷிண்டே எம்.பி-யை ஒர்லி தொகுதியில் நிறுத்தி இருக்கிறார். மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனான மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்து இருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் சேர்ந்தார்.
பாஜக-விற்கு மறுப்பு
சேர்ந்தவுடன் அவரை ராஜ்ய சபை எம்.பியாக்கினார் ஷிண்டே. கடந்த மக்களவைத் தேர்தலில் தென்மும்பை தொகுதியில் சீட் கிடைக்குமென மிலிந்த் தியோரா எதிர்பார்த்தார். ஆனால் அத்தொகுதியில் எம்.எல்.ஏ. யாமினி ஜாதவ் என்பவரை ஷிண்டே நிறுத்தினார். தேர்தலில் யாமினி ஜாதவ் தோல்வியைத் தழுவினார். இப்போது மிலிந்த் தியோராவை ஒர்லியில் ஆதித்ய தாக்கரேயிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே நிறுத்தியிருக்கிறார். ஏற்கனவே ஒர்லி தொகுதிக்கு ஏக்நாத் ஷிண்டேயும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேயும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். பா.ஜ.க ஒர்லி தொகுதியைக் கேட்டது. ஆனால் பா.ஜ.க-விற்கு கொடுக்க மறுத்து அதில் மிலிந்த் தியோராவை நிறுத்தி இருக்கிறார் ஷிண்டே.
மும்முனை போட்டி
இதே போன்று மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் மாகிம் தொகுதியிலும் மூன்று சேனாக்கள் மோதுகின்றனர். ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே மாகிம் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ஏற்கனவே சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ. சதா சர்வான்கர் போட்டியிடுகிறார். இது தவிர உத்தவ் தாக்கரேயும் தனது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். இதனால் அமித் தாக்கரேயும் மாகிம் தொகுதியில் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளார்.
2004ம் ஆண்டு ராஜ் தாக்கரே கட்சி தொடங்கிய போது மாகிம் தொகுதியில் அவரது நவநிர்மாண் சேனா வெற்றி பெற்றது. அதன் பிறகு அவரது கட்சி மாகிம் தொகுதியில் வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து இரண்டாவது இடம் வந்து கொண்டிருக்கிறது. இத்தொகுதியில் உத்தவ் தாக்கரே வேட்பாளரை நிறுத்தமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேட்பாளரை நிறுத்திவிட்டார். இதனால் அமித் தாக்கரேயும் மும்முனை போட்டியை எதிர்கொண்டுள்ளார்.
மகளுக்கு சீட், தந்தைக்கு மறுப்பு
இதே போன்று தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கட்சியில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு மீண்டும் சீட் கொடுக்க பா.ஜ.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் நவாப் மாலிக் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுசக்தி நகர் தொகுதியில் நவாப் மாலிக் மகள் சனா மாலிக்கை வேட்பாளராக அஜித்பவார் அறிவித்து இருக்கிறார். நவாப் மாலிக்கிற்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க., குற்றம் சாட்டி வருகிறது. இதற்காக நவாப் மாலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜாமீனில் வந்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தபோது அஜித்பவார் பக்கம் நவாப் மாலிக் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு அஜித்பவார் சீட் கொடுக்க மாட்டார் என்று தெரிகிறது. எனவே அவர் மான்கூர்டு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கிறார் மாலிக்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.