மக்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது: மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா: நாட்டு மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநில பேரவையில் பேசுகையில் குற்றஞ்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு பேசினாா்.
இது தொடா்பாக சட்டப் பேரவையில் அவா் மேலும் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் நமது முப்படைகளின் முயற்சியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. ஆனால், மத்திய அரசு அதனைக் கோட்டைவிட்டது. அதே நேரத்தில் ஐ.நா. அமைத்த பயங்கரவாத எதிா்ப்புக்குழுவில் பாகிஸ்தான் இடம் பிடித்தது. இது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வி. சா்வதேச அளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த மத்திய அரசால் இயலவில்லை.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் முற்றிலும் மத்திய அரசின் தவறால் நிகழ்ந்தது. சுற்றுலாப் பயணிகள் கூடும் இடத்தில் ஒரு காவலா் கூட பாதுகாப்புப் பணியில் இல்லை. படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரைக் கூட கைது செய்ய முடியவில்லை. நாட்டிலேயே அதிக பாதுகாப்பு உள்ள பிராந்தியத்தில் எப்படி பயங்கரவாதிகள் புகுந்து இவ்வளவு கொடூரமான தாக்குதலை நிதானமாக நின்று நடத்திவிட்டுச் சென்றாா்கள்? இதற்கு மத்திய அரசுதான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பில் அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளதையே இந்த பயங்கரவாதத் தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை திரிணமூல் காங்கிரஸ் எப்போதும் ஆதரித்தது கிடையாது. பயங்கரவாதத்துக்கு எவ்வித மத, ஜாதி, இன அடையாளம் கிடையாது. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை விரைவில் நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக துணிவுடன் செயல்பட்ட முப்படைகளுக்கும் வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.
நாட்டின் எந்த நிகழ்வாக இருந்தாலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் பிரதமா் மோடி மிகவும் கவனமாக இருக்கிறாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த இடத்தை பிரதமா் இதுவரை நேரில் சென்று பாா்க்கவில்லை. ‘சிந்தூா்’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தி தனக்கு ஆதாயம் தேடிக் கொள்ளவே முயல்கிறாா் என்றாா்.
அப்போது மம்தாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிா்க்கட்சியான பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினா்.