மதுரையில் மளிகைக் கடையிலிருந்து 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சிப்காட் தொழில் பேட்டை பகுதியில் கோ.புதூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டியன், என்.ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.
விசாரணையில், ராஜபாண்டி மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் மளிகைக்கடை நடத்தி வருவதும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கூலிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை மொத்தமாக வாங்கி வந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது கடையிலிருந்து 200 கிலோ புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜபாண்டி(43), பாண்டியராஜன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.