Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது!" - பட விழாவில்...
ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக இருக்கும் சிறை!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் மெஹுல் சோக்சி பெல்ஜியத்தில் தலைமறைவாக இருந்தார். அவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த நாடு அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து மெஹுல் சோக்சி அந்நாட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மெஹுல் சோக்சி தனது மனுவில் இந்தியாவில் உள்ள சிறைகள் மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. மும்பை ஆர்தர் ரோடு சிறையில் ஏற்கனவே தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடைக்க அனைத்து வசதிகளுடன் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய் மல்லையாவும் இந்தியாவில் உள்ள சிறைகள் மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டி தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்தார். எனவே மத்திய அரசு விஜய் மல்லையாவை அடைக்க ஆர்தர் ரோடு சிறையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அறையை ஏற்பாடு செய்தது.
அந்த சிறை அறை பிரிட்டன் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு இன்னும் நாடு கடத்தி வர முடியவில்லை. தற்போது மெஹுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட இருக்கிறார். அவரை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் ரோடு சிறையில் பிரத்யேக சிறை அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறையில் தனியாக டிவி, வெஸ்டர்ன் கழிவறை வசதி, டைல்ஸ் பதிக்கப்பட்ட சுவர்கள், இயற்கையான காற்று மற்றும் வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் 3 ஜன்னல்கள், 5 வெண்டிலேட்டர்கள், 3 மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இது தவிர ஆறு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. சிறை அறைக்கு வெளியில் நடைபயிற்சிக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 46 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இந்த சிறப்பு சிறைப்பிரிவில் இரண்டு அறைகள் இருக்கின்றன. சிறை எண் 12ல் அமைந்துள்ள இந்த சிறப்பு அறைகளில் வாஷ் பேஷன் வசதி கூட செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்படும் கைதிகள் மருத்துவ காரணங்கள் அல்லது கோர்ட் விசாரணைக்கு மட்டுமே அந்த சிறையில் இருந்து வெளியில் வருவார்கள். அவர் நடைபயிற்சி மேற்கொள்வதாக இருந்தாலும் அவரது சிறை அறைக்கு வெளியில் இதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறை புகைப்படங்கள் அனைத்தும் பெல்ஜிய கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெஹுல் சோக்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய சிறைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், நியாயமான விசாரணை நடைபெறுவதில்லை என்றும் வாதிடப்பட்டது.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் பெரிய மோசடி வழக்குகள் குறித்த செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவது இயற்கையானது என்றும், இது நியாயமான விசாரணை உரிமைகளை மீறாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தியாவில் சித்திரவதை, நியாயமற்ற விசாரணை அல்லது மருத்துவ உதவி மறுப்பு போன்றவற்றைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சோக்ஸி முன்வைக்கத் தவறிவிட்டதையும் கோர்ட் சுட்டிக்காட்டியது.
மெஹுல் சோக்சியின் உரிமைகள், உடல் நலம் பாதுகாக்கப்படும் என்று இந்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நாட்டின் முக்கிய நகரங்களில் அல்லது மாநிலத்திற்கு ஒரு நகரத்தில் சர்வதேச தரத்தில் ஒரு சிறை அறை கட்டப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் பிரதான குற்றவாளியாக கருதப்படும் நீரவ் மோடி தற்போது லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து நீரவ் மோடி ஒவ்வொரு கோர்ட்டிலும் தொடர்ந்து மேல்முறையீடு செய்து கொண்டிருக்கிறார். அவர் நாடு கடத்தப்பட்டால் மெஹுல் சோக்சி அறைக்கு அருகில் உள்ள அறையில் அடைக்கப்படுவார்.