லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்த்து கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். மேலும், லாஸ் ஏஞ்சலீஸில் அந்நகர நிர்வாகம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேரை லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில், 330 பேர் உரிய ஆவணங்களின்றி குடியேறியவர்கள் எனவும், 157 பேர் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், போராட்டத்திலிருந்து கலைய மறுத்த 203 பேரும், ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, கலிஃபோர்னியா ஆளுநரின் எதிர்ப்பை மீறி, சுமார் 4,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களையும், ராணுவத்தின் ‘மரைன்’ பிரிவைச் சேர்ந்த 700 வீரர்களையும் அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார்.
இந்தப் போராட்டச் சூழலைப் பயன்படுத்தி சிலர் அங்குள்ள ஆப்பிள் ஸ்டோர் மற்றும் முக்கிய வணிக வளாகங்களுக்குள் முகமூடி அணிந்துகொண்டு புகுந்து, அங்குள்ள கடைகளைச் சேதப்படுத்தி விலையுயர்ந்த பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இத்துடன், அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் மட்டுமின்றி, ஆஸ்டின், சிகாகோ, டல்லாஸ், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!