தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
லைகா நிறுவனத்துக்கான தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகா் விஷால் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகா் விஷால் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியா் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு, செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இதை மீறி, படங்களை வெளியிட்டதால், பணத்தைத் திருப்பித்தர உத்தரவிடக் கோரி, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடா்ந்தது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தைச் செலுத்தாததாலும், சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவுபடி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டாா்.