``15 வருஷமா துணையோடு சேரவில்லை, எப்படி முட்டையிட்டது 62 வயது மலைப்பாம்பு?'' - வி...
``வலிக்கிறதுதான், ஆனால் நான் மைக்கேல் ஹஸ்ஸியின் ரசிகன்" - புறக்கணிப்புகள் பற்றி அபிமன்யு ஈஸ்வரன்
இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக வீரர்களின் தேர்வு முறையில் பலருக்கும் எழும் பல கேள்விகளில் ஒருமித்த கேள்வி என்பது, `உள்ளூர் போட்டிகளில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் வீரர்கள் என்று கூறிவிட்டு அவர்களை எதன் அடிப்படையில் ரெட் பால் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்கிறீர்கள்?' என்பதுதான்.
குறிப்பிட்டுச் சொன்னால், `2024-ம் ஆண்டு ஐ.பி.எல்லில் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்த, அதேசமயம் உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிதாக எதுவும் சாதிக்காத ஹர்ஷித் ராணா எப்படி இந்திய அணியில் 3 ஃபார்மெட்டிலும் இடம்பிடித்திருக்கிறார்?

அவரைப்போலவே ஐ.பி.எல்லில் சில இன்னிங்ஸ் மூலம் வெளியில் தெரிந்த நிதிஷ் குமார் ரெட்டியை எவ்வாறு தொடர்ச்சியாக டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்கிறார்கள்?
ஐ.பி.எல்லில் குஜராத் அணியில் கடந்த 3 சீசன்களாக சிறப்பாக ஆடிவரும் தமிழக வீரர் சாய் சுதர்சனை எதனடிப்படையில் டெஸ்ட் அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள்?
ஆனால், உள்ளூர் போட்டிகளில் 65 சராசரியுடன் ஆடிவரும் சர்பராஸ் கானையும், 100-க்கும் மேற்பட்ட முதல் தர கிரிக்கெட்டில் ஆடி சுமார் 8,000 ரன்களைக் குவித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனையும் ஏன் புறக்கணிக்கிறார்கள்?' என்று கேள்விகள் நீள்கின்றன.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் 15 பேர் பட்டியலில் தேர்வாகி பென்ச்சில் மட்டுமே அமரவைக்கப்பட்டு தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான தொடரில் 15 பேர் பட்டியலில்கூட தேர்வாகாமல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன், இந்திய அணியில் ஆட தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருந்தியிருக்கிறார்.
தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகமான Revsportz-வுடனான நேர்காணலில் தனக்கு நேரும் புறக்கணிப்புகள் குறித்து பேசிய அபிமன்யு ஈஸ்வரன், ``ஆம், சில சமயங்களில் அது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறீர்கள், கடினமாக பயிற்சி செய்கிறீர்கள், ஆனால் உங்கள் கனவு பாதியிலேயே நிற்கிறது.

இருப்பினும், என் குடும்பம், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ரஞ்சி சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த விஷயங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.
கடினமாக உழைக்கிறேன், சிறப்பாக பயிற்சி செய்கிறேன். ஆனாலும் சில நேரங்களில் (புறக்கணிப்பின்போது) மோசமாக உணர்கிறேன். தொடர்ந்து முன்னேறுவதுதான் இதற்கு ஒரே வழி.
இந்த சீசனில் (ரஞ்சி) இரண்டு புதிய ஷாட்களில் பயிற்சி செய்துவருகிறேன். என்னவென்று இப்போது சொல்ல மாட்டேன்.
ஆனால், அவை நன்றாக வரும் என்று நம்புகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய ஊக்கமளிக்கக்கூடியது" என்று கூறினார்.

தொடர்ந்து தன்மீது தனக்கிருக்கும் நம்பிக்கை குறித்து பேசிய அபிமன்யு ஈஸ்வரன், "நான் மைக்கேல் ஹஸ்ஸியின் மிகப்பெரிய ரசிகன். ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெறுவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் அடித்து வந்தார்.
விடாமுயற்சியால் என்ன சாதிக்க முடியும் என்பதை அவரின் பயணம் காட்டுகிறது.
சூர்யகுமார் யாதவ் கூட 30 வயதுக்குப் பிறகுதான் இந்திய அணியில் அறிமுகமானார். இப்போது அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.
எனவே, நானும் ஏன் அப்படியிருக்கக்கூடாது? என்பது எப்போதும் என் மனதில் இருக்கும்" என்றார்