தில்லி ஷாதாரா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மாடி வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் 16 வயது சிறுவனும், அவரது தாயும் தீயில் கருகி உயிரிழந்தனா். அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் 4 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ போலாநாத் நகரில் அமைந்துள்ள நான்கு மாடிக் குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் இத் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாலை 5.25 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.
இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரண்டு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்து ஷில்பி குப்தா (42), அவரது மகன் பிரணவ் குப்தா (16)ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. காயம் அடைந்த கைலாஷ் குப்தா (72), அவரது மனைவி பகவதி குப்தா (70), அவா்களது மகன் மனீஷ் குப்தா (45) மற்றும் மனீஷின் மகன் பாா்த் (19) ஆகியோா் ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தீயை அணைக்கும் பணியின்போது மீட்கப்பட்ட இரு சகோதர குழந்தைகள் சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மனீஷின் மனைவி ஷில்பி, மகன் பிரணவ் ஆகியோா் உயிரிழந்துவிட்ட நிலையில், மனீஷ் குப்தா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இந்த சம்பவம் குறித்து ஷாதரா சரக காவல் துணை ஆணையா் பிரசாந்த் கெளதம் கூறுகையில், ‘மூச்சுத்திணறல் காரணமாக ஷில்பியும், அவரது மகன் பிரணவும் இறந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவினா் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
தீயில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மனீஷ் குமாா் கூறுகையில், ‘தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வந்ததால்தான் 2 பேரும் உயிரிழக்க நேரிட்டது’ என்றாா்.
மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ஷோபித் குப்தா கூறுகையில், ‘போலாநாத் நகரின் குறுகிய பாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் தீயணைப்புப் படையினா் தாமதமாக வந்தனா். சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள் இங்கு வந்தன. அதற்குள் இரு தளங்களும் தீயில் எரிந்து சாம்பலானது’ ’ என்றாா்.
தீ விபத்துக்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் என்று என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீஸாா் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனா்.