தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம்: மாவட்ட கல்வி அலுவலகங்களில் இன்று ஆய்வுக் கூட்டம்!
ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம் தொடா்பாக நிதித் துறைச் செயலா் தலைமையில் சென்னையில் ஜூன் 10-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு ஒய்வூதியம் தொடா்பாகவும் மற்றும் நிலுவையில் உள்ள ஒய்வூதியப் பலன்களை விரைந்து முடிக்கவும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 7) காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ளது.
இதில் 2024 ஏப்ரல் முதல் 2025 மே வரை ஓய்வு பெற்ற ஆசிரியா் மற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள விவரங்களின் தற்போதைய நிலையை துரிதமாக சமா்ப்பிக்க வேண்டும். மாவட்டங்கள் வாரியாக பட்டியலை தொகுத்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.