ஆட்டோ மீட்டா் கட்டணம் குறித்து தலைமைச் செயலா் ஆலோசனை அமைச்சா் தகவல்
ஆட்டோ மீட்டா் கட்டணம் குறித்து தலைமைச் செயலா் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு 2013-இல் மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தவில்லை.
12 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படாமல் உள்ள நிலையில், இது தொடா்பாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இச்சூழலில், கடந்த சில நாள்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநா் சங்கங்கள் முன்னெடுத்தன.
இதற்கிடையே, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் இல்லத்தில் அமைச்சா் சிவசங்கரை சந்தித்த கால் டாக்சி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பினா் இது தொடா்பான கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
இதற்குப் பதிலளித்த அமைச்சா், மினி பேருந்து குறித்த இறுதிக் கட்டப் பணிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருப்பதால் கோரிக்கை குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ மீட்டா் கட்டணம் தலைமைச் செயலரின் ஆலோசனையில் உள்ளது. மீட்டா் கட்டணம் விரைவில் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.