இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் இந்திய அணி; அறிவுரைகளை அள்ளித் தெளிக்கும் முன்னாள் வீரர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி, இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சியை தொடங்கிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து; ஹாரி ப்ரூக் காட்டில் வெற்றி மழை!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் அண்மையில் ஓய்வு பெற்றார். முழு உடல்தகுதி இல்லாத காரணத்தினால், இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் முகமது ஷமி இடம்பெறவில்லை. மூத்த வீரர்கள் பலரும் இல்லாத இளம் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.
முன்னாள் வீரர்கள் அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
புஜாரா
இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு இந்திய அணி உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் உள்ள சூழல்களில் விளையாடிய அனுபவத்தின் மூலம், பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது வெற்றிக்கு மிகவும் முக்கியம் என நான் நம்புகிறேன். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர், இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!
ஆஷிஷ் நெஹ்ரா
என்னைப் பொருத்தவரை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிகவும் கடினமானதாகவும், அதே நேரத்தில் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம். இந்திய அணி வீரர்கள் தங்களை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு உடனடியாக மாற்றிக்கொள்வார்கள் என உறுதியாக கூறமுடியும். நம்மிடம் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
இர்ஃபான் பதான்
இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப வீரர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களை மாற்றிக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அது அணிக்கு நல்லது. இந்திய அணி பல புதிய வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடுவதே வெற்றி பெறுவதற்கான வழி.
மைக்கேல் வாகன்
இந்திய அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் வீரரான ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது மிகவும் துணிச்சலான முடிவு. ஷுப்மன் கில் நன்றாக செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கிறார். கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சாதிக்க வேண்டுமென காத்திருக்கிறார்கள். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால், அது அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்கும். இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.