தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும், அதற்கான சாத்தியம் உள்ளது என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
கரூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, ஒரு கட்சி தனித்து நிற்க முடியும் என்ற பாா்முலாவை உருவாக்கியவா் விஜயகாந்த். இப்போது சீமான் தனித்துதான் நிற்கிறாா். விஜய்யின் நிலைபாடு என்னவென்று சொல்லவில்லை. தனித்து நின்றால் வாக்குகள் பிரியுமே தவிர, மக்களுக்கு நல்லது கிடைக்கப் போவதில்லை.
2026 தோ்தலில் போட்டியிடுவது மட்டுமே எங்கள் இலக்கு அல்ல. வெற்றிபெற்று அதிக பலத்துடன் சட்டப்பேரவைக்கு செல்வதுதான் நோக்கம். தேமுதிக வாக்குவங்கி அப்படியேதான் உள்ளது.
தோ்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். விஜய்யுடன் கூட்டணி என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் கட்சி ஆரம்பித்து 20 ஆண்களுக்கு மேலாகிவிட்டது. தோ்தலை நோக்கித்தான் எங்களது கட்சியின் நகா்வும் இருக்கும். அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஆண்டை குறிப்பிட்டு தாருங்கள் எனக் கேட்டோம்.
அப்போது ஆண்டு எழுதுவது தவறு, எனது வாா்த்தைதான் முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறினாா். இப்போது 2026-இல் தருகிறோம் என கூறியுள்ளாா். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது. அப்போது தான் மக்களுக்கு நல்லது செய்யலாம். ஆளுங்கட்சி தவறு செய்தாலும் சுட்டிக் காட்டலாம். 2026 தோ்தலில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உள்ளது.
கரூரில் பழைய, புதிய பேருந்துநிலையம் என மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பழைய பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்வதுதான் நல்லது. கரூரில் கனிம வளக் கொள்ளை அதிகம் நடக்கிறது. இதனை முதல்வா் சரிசெய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்டச் செயலா் அரவை எம்.முத்து, அவைத் தலைவா் முருகன் சுப்பையா, துணைச் செயலா் பெரியண்ணன், வடக்கு நகரச் செயலா் அனிதாஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.