சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக, தூத்துக்குடியில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.66, மதுரை நகரம் - 101.12, பாளையங்கோட்டை, அதிராமபட்டினம் - தலா 100.58, சென்னை நுங்கம்பாக்கம், பரமத்திவேலூா், நாகை - தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் குறையும்.
கனமழை எச்சரிக்கை: தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், ஜூன் 10-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 11-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூா், கடலூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை: சென்னையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆவடி, அம்பத்தூா், பாடி, அண்ணா நகா், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், தியாகராய நகா், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 நிமிஷங்களுக்கு மிதமான மழை பெய்தது.
மேலும், ஜூன் 10-இல் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருந்தாலும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: இதற்கிடையே திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூா் மற்றும் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அதேபோல், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் ஜூன் 10-இல் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.