சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!
RCB Stampede: 'முதலமைச்சர் தான் கூட்டம் கூட்டினார்’ - நீதிமன்றத்தில் DNA நிறுவனம் வாதம்
RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் மரணமடைந்த சம்பவத்தில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டி.என்.ஏ என்டெர்டெயின்மென்ட் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது டி.என்.ஏ நிறுவனம். இந்த மனு விசாரணையின்போது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு மக்களை அழைத்ததில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என மறுத்துள்ளனர்.

டி.என்.ஏ நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் சி.வி. நாகேஷ், "நாங்கள் யாரையும் கொண்டாட்டத்துக்கு அழைக்கவில்லை. முதலமைச்சர்தான் அழைத்தார். அவரே மக்கள் வந்து பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்" என்று வாதாடியுள்ளார்.
ட்வீட் செய்ததால் ரசிகர்கள் வந்தார்கள்
விசாரணையின்போது வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஆராய்ந்தது நீதிமன்றம். அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம், டி.என்.ஏ, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த 3 அமைப்புகள் மீதான குற்றச்சாட்டுகளும் தனித்தனியானவையா? அமைப்புகள் மீது வைக்கப்படும் குற்றாச்சாட்டில் என்ன வேறுபாடு உள்ளது என்பதை மாநில அரசு விளக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர், "சமூக ஊடக பதிவுகளே பொதுமக்கள் குவியக் காரணம். அவர்கள் ட்வீட் செய்ததால் ரசிகர்கள் வந்தார்கள்" என வாதாடினார்.

இந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகள் வழக்கின் தன்மைக்கு பொருந்துகிறதா என்பதை விசாரித்த நீதிபதி, இதை 'சட்டத்துக்கு புறம்பான கூட்டமாகக் கருத முடியாது' எனக் குறிப்பிடுள்ளார்.
அத்துடன் டி.என்.ஏ-வின் சட்ட ஆலோசகர், இது குற்றமற்ற கொலை (culpable homicide) என்ற குற்றச்சாட்டுக்கான வரம்பை எட்டவில்லை என்றும் வாதாடியுள்ளார்.
உண்மையை புறக்கணிக்கிறீர்கள்
குற்றத்தில் ஆர்.சி.பி அணியின் பங்கு இலவச பாஸ்களை விநியோகித்தது மட்டுமே என நீதிபதி கூறியதற்கு, "நீங்கள் அவர்கள் ட்வீட் செய்தனர் என்ற உண்மையை புறக்கணிக்கிறீர்கள். அதுதான் மக்கள் கூடி நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது" என வாதடியிருக்கிறார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.
பெங்களூரு நெருக்கடி வழக்கில் 4 தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் டி.என்.ஏ நிறுவனம் மற்றும் கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்கெட்டிங் தலைமை அதிகாரியின் மனுக்களுடன் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
கைது செய்யப்படாத ஆர்.சி.பி அணி மற்றும் டி.என்.ஏ நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரிக்கப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் இடைப்பட்ட காலத்தில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.