முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: உயர்நீதிமன்றம்
பொதுத் தேர்வில் கோட்டைவிட்ட அரசு மாதிரிப் பள்ளி; ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை; பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளில் அதிகமானவர்கள் தோல்வி அடைந்தனர்.
குறிப்பாக, நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தப் பள்ளியில் இருந்து தேர்வு எழுதிய 264 மாணவர்களில், 157 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
107 பேர் தோல்வி அடைந்ததால், தேர்ச்சி விகிதத்தின் (59.47) அடிப்படையில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் கடைசி இடத்தைப் பிடித்தது.
இது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதேபோன்று, 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 107 மாணவர்களில் 36 மாணவர்கள் தோல்வியடைந்து 66 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அதேபோல், இந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 59 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 99 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதனால், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் குறைந்து மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இதன் காரணமாக, பள்ளி நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறந்தாங்கி வர்த்தக சங்கம், மாவட்ட ஆட்சியரிடமும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
அரசு மாதிரிப் பள்ளி என்பது மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பள்ளி. ஆனால், அங்கேயே தேர்ச்சி விகிதம் அதலபாதாளத்துக்குப் போனது பலரையும் கேள்வி எழுப்ப வைத்தது.
இந்நிலையில், அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பாஸ்கர், அந்தோணி ராஜ், பாலச்சந்தர், இளையராஜா, மூர்த்தி, ரவி, ஜெரோம் ஆகிய 7 ஆசிரியர்களைப் பணியிட மாறுதல் செய்தும், அதேபோல் அந்தப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரஞ்சித் என்பவரைப் பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரஞ்சித் குமாரைப் பொறுத்தவரையில் அவர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வராமல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால் அவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.