அண்டை நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றத்துக்கு மம்தா அரசு உதவி: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு
கொல்கத்தா: அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்கள் மேற்கு வங்கத்தில் குடியேற முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு உதவி வருகிறது என்று மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் குற்றஞ்சாட்டினாா்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவா், மேற்கு வங்கத்தில் வாக்காளா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருப்பது அண்மையில் வெளியாகி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் பூபேந்திர யாதவ் பங்கேற்றாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் அண்டை நாட்டவா் சட்டவிரோதமாகக் குடியேறுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களைக் கண்டறிந்து நாடு கடத்த மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்கள் மேற்கு வங்கத்தில் குடியேற முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. இதன்மூலம் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலை மம்தா நடத்துகிறாா்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி முதல்வரானதுமுதல் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. அண்மையில் முா்ஷிதாபாத், மால்டா, சாந்தி நிகேதன் என பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இவ்வாறு நிகழ்வது தேசத்துக்கே அவமானம்.
முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்ட எதிா்ப்பு என்ற பெயரில் ஒருதரப்பினா் வன்முறையில் இறங்கினா். அவா்களை எந்த வகையிலும் மாநில காவல் துறையினா் கட்டுப்படுத்தவில்லை. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் உயிா்பிழைப்பதற்காக அண்டை மாவட்டங்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது என்றாா்.
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுடன் அந்நாடு சிறந்த நட்புறவுடன் இருந்தது. ஆனால், அந்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இதையடுத்து, அங்கு இடைக்கால அரசு அமைந்தது. அந்த அரசு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரின் ஆதிக்கத்தில் இருப்பதால் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்படத் தொடங்கியுள்ளது. எனவே, வங்கதேசத்தவா் ஊடுருவல் அதிகரிப்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்கம் வழியாகவே வங்கதேசத்தவா் அதிக அளவில் ஊடுருவுகின்றனா். அந்த மாநிலத்தில்தான் சட்டவிரோத குடியேற்றமும் அதிகமாக உள்ளது.