உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் தெற்கு துறைமுக நகரமான ஒடெஸா மீது ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல், 3 ஆண்டுகளாக நீடிக்கும் போரின் மிகப் பெரிய தாக்குதல்களில் ஒன்று என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி கூறினார். ரஷிய படைகள் ஒரே இரவில் 315-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும், ஏழு ஏவுகணைகளையும் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஒடெஸாவில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையும் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளும் இந்த தாக்குதலில் சேதமடைந்ததாக பிராந்திய ஆளுநர் ஒலெக் கிபர் தெரிவித்தார். அங்கு இரண்டு பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் காயமடைந்தனர். ரஷிய தாக்குதல் காரணமாக கீவின் ஒபலோன்ஸ்கி பகுதியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
உக்ரைன் போரில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியா 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் தாக்குதல் நடத்திய மறு நாள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷியாவுக்குள் ரகசியமாக ட்ரோன்களைக் கடத்தி, அவற்றின் மூலம் அந்த நாட்டின் ஏராளமான குண்டுவீச்சு விமானங்களை உக்ரைன் அழித்தது. அதற்குப் பதிலடியாக ரஷியா நடத்திவரும் தாக்குதலின் ஒரு பகுதியாக தற்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.