விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!
அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய் பகுதியில், நேற்று (ஜூன் 11) முதல் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அம்மாகாணத்தின் ஹூத் ஆற்றுக்கும், டல்லஸ் நகரத்துக்கும் இடையிலான 84-ம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிப்பதால் சுமார் 32 கி.மீ. நீளமுடைய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் மூலம் அங்கு பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க, அமெரிக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு டல்லாஸ் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 1,352 குடும்பங்கள் வெளியேற தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெளியேற்றப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக, டல்லாஸ் நகரத்தின் நடுநிலைப் பள்ளி உள்பட இருவேறு இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வாஷிங்டன் நகரத்தில், கொலம்பியா ஆற்றின் அருகில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், சுமார் 13 கி.மீ. நீளமுள்ள 14-ம் மாநில நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:இந்திய வீரரின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு