சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு!
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-ஆவது வழித்தடத்தில் (44.6 கி.மீ.) போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் இடையே கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்டு, அதனை இணைக்கும் வகையில் தண்டவாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் தண்டவாள டிராக் சரிந்து விழுந்து வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. 20 அடி உயரத்தில் இருந்து தண்டவாளம் சரிந்து விழுந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் பலியானவருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள நிலையில், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல்&டி நிறுவனமும் இழப்பீடு வழங்கும் என்று கூறுகின்றனர்.
பாலத்தை இணைக்கும் தூண்களைப் பொருத்த முயன்றபோது, திடீரென கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விபத்து ஏற்பட்ட பகுதியில், மெட்ரோ நிர்வாகமும் ஒப்பந்ததாரரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!