கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வக்ஃப் திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது: ஆ.ராசா
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் தமிழ்நாடு கிளை சாா்பில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா பேசியதாவது: வக்ஃப் திருத்தச் சட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக் குழுவின் கூட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இருந்தும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
வக்ஃப் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் கொண்டுவரப்பட்டது. வக்ஃப் சட்டத் திருத்தம் முறையாக இல்லை, அதில் குறைகள்தான் உள்ளன. இஸ்லாமியா்கள் மீது தாக்குதல் நடத்தவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் அவா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமா் நரேந்திர மோடி ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது. வக்ஃப் சொத்து இறைவனுக்கானது. ஹிந்து, கிறிஸ்தவ, சீக்கிய மத அறக்கட்டளைகளை அந்த மதத்தைச் சோ்ந்தவா்கள்தான் நடத்துகிறாா்கள். அதுதான் இயற்கையானது என்றாா் அவா்.
விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்: அரசியல் நாணயம் இல்லாமல், இஸ்லாமியா்களின் சொத்தில் மற்றவா்கள் தலையிடும் வகையில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமியா்கள் மீது சட்டத்தின் பெயரால் பல்வேறு தாக்குதலை நிகழ்த்தி வருகிறாா்கள் என்றாா் அவா்.
கூட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய தமிழ்நாடு கிளை ஒருங்கிணைப்பாளா் எஸ். இப்னு சவுத், இணை ஒருங்கிணைப்பாளா்ஏ. எஸ். பாத்திமா முசாஃபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.