ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?
"காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களின் நிலை என்ன?" - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்த நபர்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்து வாக்குவாதம் செய்து பொருட்களை அடித்து நொறுக்கி பணியில் இருந்த தலைமைக் காவலரை தாக்கி காவல் நிலையத்துக்கு பூட்டு போட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஆர்.பி.உதயகுமார் இன்று காலை சென்று கொண்டிருந்தபோது முத்துலிங்கபுரத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சத்திரப்பட்டிக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.
"நான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர், அவர்களை சந்திக்க வேண்டும், அதேபோன்று பாதிக்கப்பட்ட காவல் நிலையத்தையும் பார்வையிட வேண்டும்" என்று கூறியபோது காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து தடுத்தனர்.

இதனை தொடர்ந்து முத்துலிங்காபுரத்தில் தரையில் அமர்ந்து ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து அறிந்த சத்திரப்பட்டி கிராம பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்.பி. உதயகுமாரிடம் மனு அளித்தனர்
பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி உதயகுமார் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், "கடந்த 13 .6.2025 அன்று இரவு சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்குள் மர்மநபர்கள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும், காவலரை தாக்கி, காவல் நிலையத்தை பூட்டிவிட்டும் சென்றுள்ளனர். அந்த காவலர் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்று மக்கள் கூறுகின்றனர். காவல் நிலையத்தையே சில நபர்கள் தாக்கியுள்ளதால் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவல்துறை சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. இன்று சம்பவம் நடந்த ஊர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த என்னை வரக்கூடாது என்று போலீசார் தடுத்துள்ளனர். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நான் மக்களை சந்திக்க அனுமதி இல்லை. இன்றைக்கு சட்ட ஒழுங்கு என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது. இந்த அரசால் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறையினரை தாக்கும் தைரியம் எப்படி வந்தது? காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களின் நிலை என்ன? சமீபத்தில் உசிலம்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற காவலர் போதைப்பொருள் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார், தற்போது இங்கேயும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினால் எங்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்" என்றார்.