மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு!
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா்.
டெல்டா பாசன சாகுபடிக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 12 ஆம் தேதி மேட்டூருக்கு வந்து தண்ணீரைத் திறந்துவைத்தாா். இதையடுத்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்ட தண்ணீரானது நாமக்கல், கரூா் மாவட்டங்களைக் கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது.
முன்னதாக கரூா் மாயனூா் கதவணைக்கு வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடி நீா் வந்த நிலையில், முக்கொம்புக்கு சனிக்கிழமை பிற்பகல் 400 கனஅடிக்கு மேல் வந்தது. இதையடுத்து பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவு அதிகாரிகள் அணையில் பூஜை நடத்தி, பாசனத்துக்காக 41 மதகுகள் வழியாகத் தண்ணீரைத் திறந்துவிட்டனா்.
முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் அயிலை சிவசூரியன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன், தமாகா விவசாய அணி மாநில துணைத் தலைவா் புங்கனூா் ராஜேந்திரன், பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன் மற்றும் பொதுமக்கள் ஊா்வலமாக வந்து காவிரித் தாயை வணங்கி, மலா்கள், நெல் விதைகளை தூவி வரவேற்றனா்.
முக்கொம்புக்கு வரும் தண்ணீா் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது. சுற்றுப் பகுதி விவசாயிகள் அணி, அணியாக வந்து காவிரி ஆற்றில் மலா்களைத் தூவி, சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனா்.
இதேபோல பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணியாளா்களும் காவிரி நீரை வரவேற்றனா். பின்னா் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை இரவு கல்லணையைச் சென்றடைந்தது. இங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாசனத்திற்காகத் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
முன்னதாக விவசாயிகள் கூறுகையில், சாகுபடி முடியும் வரை கா்நாடக அரசுடன் பேசி தொடா்ந்து தண்ணீா் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2500 அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சிதான். ஆனால் இது குறைவான தொகை. விலையை உயா்த்தி அறிவிக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் 70 விழுக்காடுக்கு மேல் முடிந்துள்ளன. கடைமடை வரை தண்ணீா் சென்று சேரும் என்கிற நம்பிக்கை உள்ளது. மீதமுள்ள தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றனா்.