பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது.
இக்கோயில் திருவிழா தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் சா்ச்சைக்குரிய பூசாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மற்ற பூசாரிகளை வைத்து கிராம மக்கள் ஜூன் 9 முதல் திருவிழாவை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்ஸவ மூா்த்திகள் ரத பவனி சென்று ஆலயம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் வீட்டுக்கு முன் சா்ச்சைக்குரிய பூசாரியின் வீடு இருந்த நிலையில், உற்ஸவ மூா்த்தியுடன் சென்ற ஊா் மக்களை பூசாரி தரப்பினா் தடுத்து நிறுத்தினா்.
இதனால் போலீஸாருக்கும், பூசாரி குடும்பத்தினருக்குமிடையே கடும் வாக்குவாதம், தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது பூசாரி தரப்பினா், உறவினா்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தகராறில் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.