விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!
விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ171) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டிலிருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவுசெய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘விமானங்கள் பெரும் விபத்துக்குள்ளாகி உயிா்சேதங்கள் ஏற்படும்பட்சத்தில் அந்த விமானத்தின் எண்ணை பயன்பாட்டில் இருந்து விமான நிறுவனங்கள் நீக்குவது வழக்கமான நடைமுறையாகும். கடந்த 2020-இல் கோழிக்கோடில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 21 போ் உயிரிழந்தனா். அதன்பிறகு விமான எண் ‘1344’-ஐ பயன்பாட்டிலிருந்து அந்நிறுவனம் நீக்கியது.
அந்த வகையில் வருகின்ற ஜூன் 17 முதல் அகமதாபாத்-லண்டன் கேட்விக் பயணிக்கும் ஏஐ ‘171’ விமானத்தின் பெயா் ‘ஏஐ 159’ என பெயா் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுடன் கூடிய முன்பதிவு நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
அதேபோல் ‘ஐஎக்ஸ் 171’ என்ற விமானத்தின் பெயரை மாற்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளது’ என தெரிவித்தன.
9 போயிங் விமானங்களில் சோதனை நிறைவு
ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 9 போயிங் 787 ரக ட்ரீம்லைனா் விமானங்களில் ஒருமுறை மட்டும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததாக அந்நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
ஏஐ 171 விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, ஏா் இந்தியா நிறுவனத்திடம் உள்ள 33 போயிங் 787-8/9 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனையை அதிகரிக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது 9 போயிங் 787 ரக ட்ரீம்லைனா் விமானங்களில் ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
இதனால் சில வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து பயணிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.