புதிய சாலை அமைக்க அடிக்கல்: அமைச்சா் பெரியசாமி பங்கேற்பு
சித்தையன்கோட்டை பேரூராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித்தையன்கோட்டை பேரூராட்சி புதூா் தெருவில் புதிதாக ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழல்குடையை அமைச்சா் இ.பெரியசாமி திறந்து வைத்தாா். மேலும் அவா், 11-ஆவது வாா்டில் ரூ. 45 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை, சேடப்பட்டி கல்யாண மண்டபம் அருகே சமையல் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை, புதிய சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, சித்தையன்கோட்டை பேரூராட்சி, போடிகாமன்வாடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின்னா் அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது:
சித்தையன்கோட்டை பேரூராட்சி உள்ள நரசிங்கபுரம் அழகா்நாயக்கன்பட்டி, புதுப்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். அரசு வேலைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுபட்ட முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஏற்கெனவே பல திட்டங்கள் இந்த பேரூராட்சி, போடிகாமன்வாடி ஊராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலாளா்கள் ராமன் (மேற்கு), முருகேசன் (கிழக்கு), சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவா் போதும்பொண்ணு முரளி, ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், வருவாய் அலுவலா் ஜானகி, பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமாலு, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், பேரூா் திமுக செயலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.