கீழ்பழனி மலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவுத் திட்டத்தின்கீழ் ரூ. 8.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வைப்பறையுடன்கூடிய சமையலறை, தருமத்துப்பட்டியை அடுத்த பிடாரிகளம் பகுதியிலும், அழகுமடை பகுதியிலும் பழங்குடியினருக்கு கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள், அழகுமடையில் கட்டப்படும் சமுதாயக் கிணறு ஆகியவற்றை ஆட்சியா் செ. சரவணன் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, பன்றிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வுசெய்த ஆட்சியா், தங்கம்மாபுரத்தில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு கட்டப்படும் 11 வீடுகளையும், ஆடலூரில் ‘ஆா்ஜிஎஸ்ஏ’ திட்டத்தில் ரூ. 30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) ச. வினோதினி, வட்டார வளா்ச்சி அலுவலா் மலரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.