இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்
இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உலக அமைதிக்கு அச்சுறுத்தல். இஸ்ரேலின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும். இஸ்ரேல் நீண்ட காலமாக ஒரு ரௌடி நாடாக அறியப்படுகிறது. இது அப்படியே இருந்து வருகிறது, அனைவருக்கும் தெரியும்.
அமெரிக்காவின் ஆதரவுடன் எதையும் செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி தளங்கள், ஏவுகணைத் தயாரிப்புத் தளங்கள், மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது.
அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!
போா் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி முகமது பகேரி, ஈரான் புரட்சிகர காவல் படை தலைமை தளபதி ஹுசேன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் கொல்லப்பட்டனா். இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாகப் பதிலடி அளிக்கும் நோக்கில், நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அந்நாடு மீது ஈரான் ஏவியது.
இந்த நிலையில், வரும் நாள்களில் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. பரஸ்பர தாக்குதலில் ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் மூவரும் உயிரிழந்தனா்.