குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா்
குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.
துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தோ்வு அறிவிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதேபோன்று, குரூப் 1ஏ பிரிவிலும் 2 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தோ்வுகளுக்காக தமிழகம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 170 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா். 63 ஆயிரத்து 166 போ் தோ்வு எழுதவில்லை.
சென்னை எழும்பூா் மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே. பிரபாகா் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
தோ்வுகளை அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடத்தி வருகிறோம். குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து முதன்மை தோ்வுகள் நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி மூலமாக, கடந்த ஆண்டு 10,701 பேர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10,227 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் இன்னும் 12,231 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது என்று அவா் கூறினார்.