ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்
'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி
நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இப்போது கொஞ்சம் அமைதியாக இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை அறிய அவரை நேரில் சந்தித்தே உரையாடினோம்.

``விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிதான் இப்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் ஐ.ஆர்.எஸ் என சிலர் அவர் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். நீங்களும் தவெகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் உண்டே. உண்மையிலேயே இணைகிறீர்களா?”
``தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்கமும் அந்த முதல் மாநாடும் ஒரு ஈர்ப்பைக் கொடுத்தது. இளைஞர்கள் பலத்துடன் புதிய சக்தியாக விஜய் அரசியல் களத்துக்குள் வருவதைப் போல இருந்தது. தனக்கென ஒரு கொள்கையையும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். அதனால் புதிதாக முளைக்கின்ற செடியின் மேல் எதற்கு வெந்நீரை ஊற்ற வேண்டும் என்றுதான் அவர்களுக்கு ஆதரவாக எழுதினேன். அதற்காக அவர்களின் கட்சியில் இணைகிறேன் என்று பொருள் இல்லை.

நான் அவர்களுக்கு ஆதரவாக எழுதிய சில கருத்துகளை பார்த்துவிட்டு தவெகவின் சில நிர்வாகிகள் என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள் என்பது உண்மைதான். ஆனால், நான் அரசியல் அனுபவம் மிக்கவன். ஜெயலலிதா அம்மாவுக்கு உரையாசிரயராக இருந்திருக்கிறேன். நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறேன். எடப்பாடியின் போக்கு பிடிக்காமல் அதிமுகவிலிருந்து வெளியேறி ஓ.பி.எஸ் உடன் நின்றேன். இப்போது அங்கும் இல்லை. அரசியலில் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்கிறேன். தவெகவின் அரசியல் போக்கை வைத்துதான் எந்த முடிவையும் எடுக்க முடியும்.”
``அதிமுகவில் நீண்ட நெடிய அனுபவம் மிக்கவர் என்பதால் கேட்கிறேன். விஜய் அண்ணா போலவும் எம்.ஜி.ஆர் போலவும் தன்னை சித்தரிக்க முயல்கிறாரே. அந்த அணுகுமுறை எடுபடுமென நினைக்கிறீர்களா?”
``அண்ணா 1916 லிருந்தே அரசியலில் இருந்தார். திராவிடர் கழகத்திலிருந்து திமுகவை தொடங்கி 18 ஆண்டுகள் உழைத்து ஆட்சியைப் பிடித்தார். அத்தனை ஆண்டுகள் உழைத்து வெறும் ஒன்றரை ஆண்டுகள்தான் ஆட்சியில்தான் இருந்தார். எம்.ஜி.ஆர் 20 ஆண்டுகளுக்கும் திமுகவிலிருந்து உழைத்து 1972 இல் அதிமுகவை தொடங்கி 1977 இல்தான் ஆட்சியைப் பிடிக்கிறார். எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருப்பதெல்லாம் தவறில்லை. ஆனால், அதற்கு உழைக்க வேண்டும்.

ஒரு பாடலிலேயே முதலமைச்சர் ஆகிவிட இது சினிமா இல்லை, அரசியல். விஜய் இதுவரைக்கும் கால்ஷீட் ஒதுக்கிதானே அரசியலை பார்த்து வருகிறார். உள்ளரங்கக் கூட்டங்களை மட்டும்தானே நடத்தியிருக்கிறார். மக்களை சந்திக்கவே இல்லையே. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்றார். ஆனால், எந்தக் கட்சியும் எந்த முக்கியப் புள்ளிகளும் அவரை நம்பி செல்லவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கவில்லை. நாம் எங்கே சறுக்குகிறோம் என்பதை விஜய் யோசிக்க வேண்டும்.”
``திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எடப்பாடி ஒரு பெரிய கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சியில் இருக்கிறார். தேர்தல் அரசியலில் விஜய் தனித்துவிடப்படுகிறாரோ?”
``திமுக தன்னுடைய கூட்டணியை வலுவாக வைத்திருக்கிறது. ஆனால், எடப்பாடி அப்படி ஒன்றும் வலுவான கூட்டணியை அமைக்கவில்லையே. ஈரோட்டுக்கு தனது சொந்தங்களின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு சென்றவுடன் டெல்லிக்கு ஓடி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என எடப்பாடி கூறியபோது அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்து கொண்டாடினர். இப்போது கூட்டணி அமைந்த போது யாராவது கொண்டாடினார்களா?

எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையான மனிதர். அவரை பாஜக தலைமையும் முழுமையாக நம்பாது. எடப்பாடி கட்சியையும் காலி செய்துவிட்டார். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களை அடுத்தடுத்து வெளியேற்றி கட்சியை வன்னியர் கவுண்டர் கட்சியாக மாற்றிவிட்டார். 10 தேர்தல்களில் தோற்றுவிட்டார். ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை. இதே நிலை நீடித்தால் திமுக மிக எளிதாக 2026 தேர்தலை வென்றுவிடும்.”
``எடப்பாடி பழனிசாமி மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். ஆனால், விஜய்க்கும் அதிமுகவுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகிறதே. அதற்கேற்றார் போல இருதரப்பும் ஒருவரையொருவர் விமர்சிப்பதில்லையே.”
``விஜய் அதிமுகவை விமர்சிக்காததற்கு கூட்டணி கணக்குகள்தான் காரணம் என சொல்ல முடியாது. அதிமுக நட்சத்திர முகங்களை ஆதாரமாக கொண்டிருந்த கட்சி. ஆனால், எடப்பாடி அந்த நட்சத்திர அந்தஸ்தும் ஈர்ப்பும் இல்லை. விஜய்யிடம் அது இருக்கிறது. அதனால் எம்.ஜி.ஆர் பிம்பத்தை வைத்து அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கலாம் என விஜய் நினைக்கிறார். அதனால்தான் அதிமுகவை அவர் விமர்சிப்பதில்லை.
அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும் விஜய் கூட்டணிக்கு வந்தால் வென்றுவிடலாம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர். ஆனால், அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தால் விஜய்க்குதான் ஆபத்து. என் தலைமையில் கூட்டணி, என் தலைமையில் ஆட்சி என கூறிவிட்டு அதிமுகவோடு சென்றால் விஜய் தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிடுவார். சோர்ந்து போய் துவண்டு போய் இருக்கும் எடப்பாடியின் அதிமுகவை ஓரங்கட்டிவிட்டு திமுகவுக்கு எதிர்க்கட்சி நான்தான் என விஜய் அழுத்தமாக நிறுவினால் அதிமுக தொண்டர்களும் விஜய் பக்கமாக வருவார்கள்.”
விரிவான பேட்டிக்கான லிங்க்