ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்
ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.
ஏர் இந்தியா விமான விபத்து நேரிட்ட இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்த 241 பேர் பலியான நிலையில், விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்களும் பலியாகியிருக்கிறார்கள்.
ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண்ணாக இருந்த மும்பையைச் சேர்ந்த சைனீதாவும் இந்த விபத்தில் பலியாகியிருக்கிறார்.
மும்பையில், அவரது தாய் மற்றும் தந்தையால், பணிக்குச் சென்ற மகள் திரும்ப வரமாட்டாள் என்ற உண்மையை ஏற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ ஆறுதல் சொன்னாலும் ஏற்பதற்கில்லை.
ஆறுதல் சொல்ல வருவோரிடமெல்லாமல், ஒரே ஒரு நாள் விட்டுவிடுங்கள். அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள் பாருங்கள் என வீட்டின் கதவைப் பார்த்தபடியே இருக்கிறார் சைனீதாவின் தாய்.
தனது பெண்ணின் குழந்தைப் பருவ சுட்டித்தனங்கள் குறித்துச் சொல்லி சொல்லி மாய்கிறார். அவரது நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாத உறவினர்கள், செய்வதறியதாது தவித்து வருகிறார்கள்.