குஜராத் விமான விபத்து! களத்தில் பிரிட்டன் விசாரணைக் குழு!
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில் பிரிட்டன் நாட்டு விசாரணைக் குழுவும் இடம்பெறுவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 245 பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விபத்தில் பிரிட்டன் நாட்டினரும் பலியானதால், அந்நாட்டு விசாரணைக் குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
விபத்து குறித்து இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு (AAIB) தலைமையில் நடத்தப்படும் விசாரணையில் பிரிட்டன் குழுவும் இடம்பெறவுள்ளது.
சிவில் விமான விபத்துகள், கடுமையான விபத்துகள் அல்லது சம்பவங்களை விசாரிக்கும் பிரிட்டன் விசாரணை நிறுவனத்தை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விமான விபத்து தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணைக்கு ஒரு விசாரணைக் குழுவை நாங்கள் அனுப்பியுள்ளோம். இந்த விசாரணைக் குழுவை வெளியுறவுச் செயலர் டேவிட் லம்மி வழிநடத்துவார்.
விபத்து குறித்த மேற்பட்ட தகவல்களுக்கு, வெளியுறவு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!