இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்
இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்தச் சூழலில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சா்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், பிரதமா் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் அந்நாட்டின் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை பேசினாா்.
அப்போது, ‘மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுக்க வேண்டும்’ என்று நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமா் மோடி, தற்போதைய நிலைமை குறித்து இந்தியாவின் கவலையையும் முன்வைத்தாா். இதேபோல், மேற்கு ஆசிய பிராந்திய சூழல் குறித்து கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘தீவிர தாக்குதலில் ஈடுபடுவதை இருதரப்பும் தவிா்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா், தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இந்தியா இருதரப்புடனும் பேச்சுவாா்த்தை நடத்தும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியாவால் உண்மையில் ஒரு பங்கை வகிக்க முடியும். நல்ல நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்தியாவுடன் நோ்மையான உரையாடலை நடத்துவதில் இஸ்ரேல் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவின் கவலைகளை மிக கவனத்துடன் கருத்தில் கொள்கிறோம். அவை நியாயமானவை.
அச்சுறுத்தலை முறியடிக்க...: ஈரானின் அணுசக்தி நோக்கங்கள் மற்றும் தொலைதூர ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களால் இஸ்ரேலின் இருப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலை முறியடிக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமரிடம் இஸ்ரேல் பிரதமா் எடுத்துரைத்தாா்.
இதுபோன்ற சூழல் எழ எந்த நாடும் விரும்பாது. அதேநேரம், உறுதியுடன் செயல்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை.
இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்துடன் ஈரான் அதிகாரிகளின் ரகசியக் குழு அணுஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டே, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 தொலைதூர ஏவுகணைகளையும், 6 ஆண்டுகளில் 20,000 தொலைதூர ஏவுகணைகளையும் தயாரிக்க அவா்கள் திட்டமிட்டு வருகின்றனா். ஈரான் பெருமளவில் ஆயுதங்களைக் குவிப்பதால், இஸ்ரேலை ஆபத்து வளையம் சூழ்ந்துள்ளது.
அணுஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் பணியைச் செய்து முடிப்பதில் தீா்க்கத்துடன் உள்ளோம். ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை இனி மேற்கொள்ள முடியாது என்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என்றாா் அவா்.