நைஜீரியா: மர்ம நபர்களின் கொடூரத் தாக்குதலில் 100 பேர் பலி!
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 100 பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. பலரது வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு, குடும்பத்துடன் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பலரும் காணாமல் போய்விட்டதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவ வசதி இல்லாததுகூட கவலை அளிக்கிறது.
இப்பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக நிலத்தை தேடுபவர்களுக்கும், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான நிலப் பிரச்னையில் தொடங்கி, இன மற்றும் மதங்கள் அளவிலான பிரச்னைகள் வரையில் மோதல்கள் உருவாகின்றன.
2019 ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் மோதல்களில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்; 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.