குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்
கோபமிருந்தால் மன்னியுங்கள்: ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி!
திருவள்ளூர்: தந்தையர் நாளான இன்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், என் மீது கோபமிருந்தால் மன்னியுங்கள்,நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் மகனாக நான் செய்கிறேன் என திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளர் நகரில் உள்ள தனியார் திருமணஅரங்கில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம்? தொகுதி வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து இந்த பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் பாமக உறுப்பினர் சேர்க்கை,வாக்குச் சாவடிகளில் குழுக்கள் அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் அன்புமணி பேசியதாவது:
பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. கட்சியை தொடங்கிய சமூகநீதி போராளி ராமதாஸ் வழி நடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய நோக்கமே நமக்கு ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என்பதற்காகத்தான்.
கட்சி தொடங்குவதற்கு முன்பு வன்னியர் சங்கத்தை தொடங்கி சமூக நீதிக்காக பல போராட்டங்களை ராமதாஸ் நடத்தியும் பலன் இல்லை. அதன்பின்னர் சமூக நீதிக்காக பாமகவை தொடங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் மக்களை சந்தித்து மிகப்பெரிய பிரசாரம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சமூக நீதி மாநாடு நடத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தினோம். 2026-இல் பாமக அங்கம் உள்ள கூட்டணி ஆட்சி அமையும். நாமும் ஆள வேண்டும், 2004-இல் ஆட்சியில் அங்கமாக இருந்த போது, கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இல்லையேல் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என கூறியதால் அன்று மாலையில் இட ஒதுக்கீடை சோனியா அறிவித்தார்.
தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக எனவும், வரும் ஜூலை 25-ஆம் தேதி தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் 100 நாள்கள் தொடங்கப்பட உள்ளது. 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-இல் நடைபயணம் தொடங்க உள்ளோம்.
கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை விடப்போவதில்லை. 1700 ஏக்கர் நிலத்தில்அறிவுசார் நகரம் அமைக்க விடமாட்டோம். திருவள்ளூருக்கு மாற்றாக தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலைக்கு மாற்றுங்கள். பாமக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் இருக்காது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வைப்போம்.
இன்று உலக தந்தையர் நாள். இந்நாளில் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
தமது தந்தையான ராமதாஸ் நல்ல ஆயுளோடு, மன நிம்மதியோடும், நல்ல உடல் நலத்தோடும், மகிழ்ச்சியோடு 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும்.
என் மீது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாலும், சர்க்கரை, ரத்த அழுத்தம் இருப்பதால் அதிகமாக மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை செய்து காட்டுகிறேன். தன் மீது வருத்தப்படவோ, கவலைப்படவோ, கோபப்படவோ வேண்டாம்.
ஏனென்றால் இது நீங்கள் உருவாக்கிய கட்சி. 45 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்த கட்சியை உங்கள் கனவுகளை நினைவாக்குவோம். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, உங்களை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் என குறிப்பிட்டார். அந்த மதிப்பு எங்களுக்கும் உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்று வரும் மோதல் நீண்ட நாள்களாக நீடித்து வரும் நிலையில், அன்புமணி தனது தந்தையிடம் மாவட்ட பொதுக்குழு மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பது பாமக கட்சி தொண்டர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது.
இதில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்குரைஞர் பாலு, முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கே.என்.சேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி மற்றும் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.