இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!
இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று நாடுகள் இடையே கடந்த 2024 அக்டோபரில் முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரத்தை விற்பனை செய்ய இந்தியா தனது பிராந்தியத்தில் உள்ள மின்வட உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த அனுமதி அளித்தது.
ஜூன் 15 முதல் நவம்பா் 15 வரை முஷாஃபா்பூா்-பஹ்ராம்பூா்-பெராமாரா வழியாக அமைக்கப்பட்டுள்ள மின்வடங்கள் வழியாக இந்த மின்சார விற்பனை நடைபெறவுள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேபாளத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க வங்கதேசம் ஒப்புக் கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சி வன்முறைப் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்டது. அதன் பிறகு அங்கு மத அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
அந்த அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கியதால், வங்கதேச ஜவுளி உள்ளிட்ட பொருள்களை இந்திய துறைமுகங்கள் மூலம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவுக்கு எதிரான நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருகிறது.