அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!
ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனா். இதில் குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானியும் அடங்குவாா். விமானம் விழுந்து வெடித்துச் சிதறிய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பொதுமக்கள் 29 பேரும் இறந்தனா்.
விபத்தில் உடல் கருகி உயிரிழந்தவா்களின் மீட்கப்பட்ட உடல்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 24 பேரின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதல்வா் பூபேந்திர படேல் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து, டிஎன்ஏ சோதனையில் உடல் கண்டறியப்பட்டுள்ள தகவலை அவா்களிடம் தெரிவித்ததாக மாநில சுகாதார அமைச்சா் ருஷிகேஷ் படேல் தெரிவித்தாா்.
தீவிரமாகும் விசாரணை: விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தலைமையில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமான விபத்து குறித்து விசாரணையில் கடந்த 3 நாள்களாக ஈடுபட்டுள்ளன.
இதையொட்டி, அகமதாபாத் மாநகராட்சி ஆணையா் பஞ்ச நிதி பானி கூறுகையில், ‘விமானத்தின் வால்பகுதி மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கியிருந்தது. அதிலிருந்து கருப்புப் பெட்டியை மீட்பதற்கு ஏஏஐபி எங்களிடம் உதவிக் கோரியது. அதன்படி கருப்புப் பெட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டது’ என்றாா்.